۞ அல் குர்ஆன் தெளிவுரைஅல்-குர்ஆன் – மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வழிகாட்டுதலும் தீர்வும்
English
65

தலாஃக்

விவாகரத்து

Talaq

Surah 65  ·  12 வசனங்கள்

الطلاق
۞

بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)

65:1

يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحۡصُواْ ٱلۡعِدَّةَۖ وَٱتَّقُواْ ٱللَّهَ رَبَّكُمۡۖ

65:1. இறைவழிகாட்டுதலின்படி சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! விவாகரத்து கோரி விண்ணப்பித்த தம்பதியர்கள் விஷயத்தில் தலாஃக் அறிவிப்பு செய்யும் போது, அப்பெண்ணின் மாதவிடாய்ப் பற்றிய கணக்கை விசாரித்து, அதன்படி மூன்று மாத கால அவகாசம் அளித்து, தலாஃக் அறிவிப்பு செய்யுங்கள். (பார்க்க: 2:228-237&33:49)) அல்லாஹ்வின் இந்த கட்டளையைப் பேணி செயலாற்றுங்கள்.

لَا تُخۡرِجُوهُنَّ مِنۢ بُيُوتِهِنَّ وَلَا يَخۡرُجۡنَ إِلَّآ أَن يَأۡتِينَ بِفَٰحِشَةٖ مُّبَيِّنَةٖۚ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهُۥۚ لَا تَدۡرِي لَعَلَّ ٱللَّهَ يُحۡدِثُ بَعۡدَ ذَٰلِكَ أَمۡرٗا١

விவாகரத்து செய்திட விண்ணப்பித்த தம்பதியர்களில் மானக்கேடான செயலை செய்ததாகக் காரணம் காட்டி விவாகரத்து கோரி இருந்தால், அவளை வீட்டை விட்டு வெளியேற்றி விடலாம். மற்ற காரணங்களுக்காக விவாகரத்து செய்திட விண்ணப்பித்து இருந்தால், அத்தம்பதியர் விவாகரத்து தீர்ப்பு கிடைக்கும் வரையில் ஒரே வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதி உண்டு. (பார்க்க 65:4) இவை யாவும் அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். யார் இதை மீறி நடக்கிறாரோ, அவர் மிகப் பெரிய அநியாயக்காரர் ஆகிவிடுகிறார். ஏனெனில் இதைக் கொண்டு அத்தம்பதியர் மீண்டும் இணைந்து வாழ வழிகள் பிறக்கலாம் அல்லவா? இதைக் கருத்தில் கொண்டு தான் இத்தகைய வரையறைகள் அறிவிக்கப்படுகின்றன.

மனைவி தன் கணவனின் துன்புறுத்தலால் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்தால் அவள் தன் கணவன் வீட்டில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

65:2

فَإِذَا بَلَغۡنَ أَجَلَهُنَّ فَأَمۡسِكُوهُنَّ بِمَعۡرُوفٍ أَوۡ فَارِقُوهُنَّ بِمَعۡرُوفٖ وَأَشۡهِدُواْ ذَوَيۡ عَدۡلٖ مِّنكُمۡ وَأَقِيمُواْ ٱلشَّهَٰدَةَ لِلَّهِۚ ذَٰلِكُمۡ يُوعَظُ بِهِۦ مَن كَانَ يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجۡعَل لَّهُۥ مَخۡرَجٗا٢

65:2. அவர்களுக்கு அளிக்கப்பட்ட காலத் தவணை முழுமை அடையும் தருவாயில், அத்தம்பதியர் மீண்டும் இணைந்து வாழ வழி இருக்கிறதா என்பதை அலசிப் பாருங்கள். அவர்கள் விரும்பினால் விவாகரத்து கோரிக்கையை திரும்பப் பெற்றுக்கொண்டு, தன் மனைவியை தன்னிடமே நிருத்திக் கொள்ளலாம் அல்லது அவளை விட்டு சட்டப்படி பிரிந்தும் செல்லலாம். அவர்கள் விவாகரத்து கோரிக்கையை ரத்து செய்து விட்டு மீண்டும் இணைந்து வாழ விரும்பினாலும், பிரிந்து செல்ல விரும்பினாலும் மத்தியஸ்தர்கள் இருவரை சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் அந்த சாட்சிகளை அல்லாஹ்வின் சட்டப்படி பதிவு செய்து கையொப்பம் பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கும் மனித செயல்களின் இறுதி விளைவுகள் என்ற சட்டத்தையும் ஏற்று நடப்பவர்களுக்கு இந்த அறிவுரை செய்யப்படுகிறது. ஆக எந்தச் சமுதாயம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடக்கின்றதோ, அது சிறப்பான சமுதாயமாக விளங்க வழிகள் பிறக்கும்.

65:3

وَيَرۡزُقۡهُ مِنۡ حَيۡثُ لَا يَحۡتَسِبُۚ وَمَن يَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسۡبُهُۥٓۚ إِنَّ ٱللَّهَ بَٰلِغُ أَمۡرِهِۦۚ قَدۡ جَعَلَ ٱللَّهُ لِكُلِّ شَيۡءٖ قَدۡرٗا٣

65:3. அந்த சமுதாயத்தில் அவர்கள் நினைத்தும் பார்த்திராத அளவுக்கு வாழ்வாதார வசதிகள் அல்லாஹ்வின் நியதிப்படி பெருகிவரும். மேலும் எந்த சமுதாயம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு செயல்படுமோ, அதுவே இத்தகைய சமுதாயமாக விளங்கும். நிச்சயமாக அல்லாஹ்வின் இந்த வாக்கு நிறைவேறியே தீரும். காரணம் அல்லாஹ் ஒவ்வொரு விஷயத்திலும் தக்க அளவுபடி சட்ட வரையறைகளை நிர்ணயித்துள்ளான்.

65:4

وَٱلَّٰٓـِٔي يَئِسۡنَ مِنَ ٱلۡمَحِيضِ مِن نِّسَآئِكُمۡ إِنِ ٱرۡتَبۡتُمۡ فَعِدَّتُهُنَّ ثَلَٰثَةُ أَشۡهُرٖ وَٱلَّٰٓـِٔي لَمۡ يَحِضۡنَۚ

65:4. மேலும் சில பெண்களுக்கு வயது முதுமையின் காரணமாகவோ அல்லது உடல் நிலை காரணமாகவோ மாதவிடாய் ஏற்படாமல் இருக்கலாம். அத்தகைய பெண்கள் விஷயத்தில் தலாஃக் அறிவிப்புக்குப் பின் அளிக்கப்படும் கால அவகாசம் மூன்று மாதங்களாக இருக்கும். (பார்க்க 2:228)

وَأُوْلَٰتُ ٱلۡأَحۡمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعۡنَ حَمۡلَهُنَّۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجۡعَل لَّهُۥ مِنۡ أَمۡرِهِۦ يُسۡرٗا٤

இந்த இடைவெளி காலத்தில் அந்தப் பெண் கருத்தரித்தால் அந்தக் கால அவகாசம் அவள் பிரசவிக்கும் வரையில் நீட்டிக்கப்படும். இவை யாவும் அந்த தம்பதியர் பிரிந்து செல்வதை கூடுமான வரையில் தவிர்க்கத் தான் ஆகும். ஆக எந்த சமூகத்தவர் அல்லாஹ்வின் வரையறைகளைப் பேணி நடக்கிறார்களோ, அங்கு எல்லா காரியங்களும் சீராகி வரும்.

65:5

ذَٰلِكَ أَمۡرُ ٱللَّهِ أَنزَلَهُۥٓ إِلَيۡكُمۡۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يُكَفِّرۡ عَنۡهُ سَيِّ‍َٔاتِهِۦ وَيُعۡظِمۡ لَهُۥٓ أَجۡرًا٥

65:5. இதுவே விவாகரத்து பற்றிய கட்டளைகளாகும். இவற்றை நன்றாக அறிந்து அவற்றின்படி செயல்படுவதற்காக அருளப்படுகின்றன. எந்த சமுதாயம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடக்கின்றதோ, அவர்களிடையே இருந்து வந்த தவறான பழக்க வழக்கங்கள் நீங்கி, அது மகத்தான தலைசிறந்த சமுதாயமாக மாறிவரும்.

65:6

أَسۡكِنُوهُنَّ مِنۡ حَيۡثُ سَكَنتُم مِّن وُجۡدِكُمۡ وَلَا تُضَآرُّوهُنَّ لِتُضَيِّقُواْ عَلَيۡهِنَّۚ

65:6. நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்ப, விவாகரத்து செய்திட விண்ணப்பித்து விவாகரத்து தீர்ப்பு கிடைக்கும் வரையில் உள்ள கால அவகாசத்தில், அவள் உங்கள் வீட்டில் தங்கியிருப்பதை தடை செய்யாதீர்கள். மேலும் உங்கள் வசதிக்கேற்ப அவளுக்கு உதவி செய்யுங்கள். அவளை எந்த வகையிலும் துன்புறுத்தாதீர்கள்.

وَإِن كُنَّ أُوْلَٰتِ حَمۡلٖ فَأَنفِقُواْ عَلَيۡهِنَّ حَتَّىٰ يَضَعۡنَ حَمۡلَهُنَّۚ فَإِنۡ أَرۡضَعۡنَ لَكُمۡ فَ‍َٔاتُوهُنَّ أُجُورَهُنَّ وَأۡتَمِرُواْ بَيۡنَكُم بِمَعۡرُوفٖۖ وَإِن تَعَاسَرۡتُمۡ فَسَتُرۡضِعُ لَهُۥٓ أُخۡرَىٰ٦

அவள் கருத்தரித்தால் அவள் பிரசவிக்கும் வரையில் அவளுக்கு வேண்டிய வசதிகளை செய்து தாருங்கள். குழந்தைப் பிறந்த பின்பு அவள் பாலூட்ட விரும்பினால் அதுவரையில் அவளுக்கு வேண்டிய வசதிகளை செய்து தாருங்கள். இதைப் பற்றி ஒருவரையொருவர் கலந்தாலோசித்து முடிவெடுங்கள். (மேலும் பாhக்க 2:233) அப்படி பாலூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டால் அக்குழந்தையை மற்ற செவிலித் தாயை வைத்து பாலூட்ட வழி செய்யலாம்.

65:7

لِيُنفِقۡ ذُو سَعَةٖ مِّن سَعَتِهِۦۖ وَمَن قُدِرَ عَلَيۡهِ رِزۡقُهُۥ فَلۡيُنفِقۡ مِمَّآ ءَاتَىٰهُ ٱللَّهُۚ لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا مَآ ءَاتَىٰهَاۚ سَيَجۡعَلُ ٱللَّهُ بَعۡدَ عُسۡرٖ يُسۡرٗا٧

65:7. ஆக வசதி படைத்தவர்கள் தம் வசதிக்கேற்ப அவளுக்கு உதவி செய்யட்டும். வசதி பெறாமல் நெருக்கடியான நிலையில் இருப்பவர்கள், அவளுடைய பராமரிப்புச் செலவை ஏற்றுக்கொள்ள அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு விண்ணப்பிக்கலாம். யாருக்கும் அவருடைய சக்திக்கு மீறின வகையில் சிரமப்படுத்தக் கூடாது என்பதே அல்லாஹ்வின் சட்டத்தின் நிலைப்பாடாகும். இத்தகைய சமுதாய சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் போது, ஆரம்ப கால கட்டத்தில் சிரமங்கள் ஏற்படலாம். ஆனால் காலம் செல்ல செல்ல இந்த சிக்கல்கள் எல்லாம் நீங்கி எல்லா அனுகூலங்களும் ஏற்படும்.

65:8

وَكَأَيِّن مِّن قَرۡيَةٍ عَتَتۡ عَنۡ أَمۡرِ رَبِّهَا وَرُسُلِهِۦ فَحَاسَبۡنَٰهَا حِسَابٗا شَدِيدٗا وَعَذَّبۡنَٰهَا عَذَابٗا نُّكۡرٗا٨

65:8. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! இதற்கு முன் அல்லாஹ்வின் இத்தகைய அறிவுரைகளையும் இறைவனின் ஆட்சியமைப்புச் சட்டங்களையும் ஏற்க மறுத்து, அவற்றிற்கு மாற்றமாக செயல்பட்ட எத்தனையோ சமுதாயங்கள் சீரழிந்துவிட்டன. காரணம் அதனால் சமுதாயத்தில் பல சிக்கல் ஏற்பட்டன. அவற்றை அவர்களால் தீர்க்க முடியாமல் கொடிய வேதனைகளுக்கு ஆளானார்கள்.

65:9

فَذَاقَتۡ وَبَالَ أَمۡرِهَا وَكَانَ عَٰقِبَةُ أَمۡرِهَا خُسۡرًا٩

65:9. எனவே அவர்கள் செய்து வந்த தவறான செயல்களுக்குரிய தண்டனையை அவர்கள் அனுபவித்துக் கொண்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு மாற்றமாக செயல்பட்டு எவ்வித பலனையும் பெறவில்லை. மாறாக அவர்கள் பெரு நஷ்டத்தில்தான் இருந்தார்கள்.

65:10

أَعَدَّ ٱللَّهُ لَهُمۡ عَذَابٗا شَدِيدٗاۖ

65:10. அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு மாற்றமாகச் செயல்படும் போது, காலப் போக்கில் சிக்கல்கள் பல ஏற்பட்டு வேதனைகளாக விஸ்வரூபம் எடுக்கும். இப்படிப்பட்ட சட்டத்தைத் தான் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

فَٱتَّقُواْ ٱللَّهَ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ٱلَّذِينَ ءَامَنُواْۚ قَدۡ أَنزَلَ ٱللَّهُ إِلَيۡكُمۡ ذِكۡرٗا١٠

ஆகவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்ட அறிவுடையோரே! அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக நடப்பதால் ஏற்படும் பேரழிவுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நீங்கள் எக்காலத்திலும் கடைப்பிடிக்கக் கூடிய சட்ட திட்டங்களையே அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்டுள்ளன என்பதை அறிந்து அதன்படி செயல்படுங்கள்.

65:11

رَّسُولٗا يَتۡلُواْ عَلَيۡكُمۡ ءَايَٰتِ ٱللَّهِ مُبَيِّنَٰتٖ لِّيُخۡرِجَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ

65:11. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை தெளிவான முறையில் எடுத்துரைக்கும் தூதர் (ஆசிரியர்) உங்களிடையே இருக்கிறார். இப்போது அவர் மக்களிடம் ஒப்படைத்த குர்ஆன் உங்களிடம் இருக்கின்றது. எனவே எந்த சமுதாயம் அவற்றின் உண்மை நிலையை அறிந்து அவற்றை ஏற்று அதற்கேற்றவாறு ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி உழைக்கின்றதோ, அவர்கள் அறியாமை என்ற இருளிலிருந்து விடுபட்டு ஞானமிக்கவர்கள் என்ற வெளிச்சத்திற்கு வந்து விடுவார்கள்.

وَمَن يُؤۡمِنۢ بِٱللَّهِ وَيَعۡمَلۡ صَٰلِحٗا يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ قَدۡ أَحۡسَنَ ٱللَّهُ لَهُۥ رِزۡقًا١١

இவ்வாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி உழைப்பவர்களின் சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். மேலும் அங்கு பொருளாதார வசதிகள் வற்றாத ஜீவநதி போல் பெருகி வரும். அதில் அவர்கள் சிறப்பாக செயல்படும் வரையில் நிலையான சுவனத்தில் இருப்பார்கள். அத்தகைய சமூகத்தவர்களுக்கு அல்லாஹ்வின் நியதிப் படி அழகிய முறையில் வாழ வழிகள் பிறந்து விடுகின்றன.

65:12

ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ سَبۡعَ سَمَٰوَٰتٖ وَمِنَ ٱلۡأَرۡضِ مِثۡلَهُنَّۖ يَتَنَزَّلُ ٱلۡأَمۡرُ بَيۡنَهُنَّ لِتَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ وَأَنَّ ٱللَّهَ قَدۡ أَحَاطَ بِكُلِّ شَيۡءٍ عِلۡمَۢا١٢

65:12. அல்லாஹ்வின் வாக்குறுதியில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அகிலங்களின் படைப்புகளைப் பற்றி ஆராய்ந்துப் பாருங்கள். ஏழேழு வானங்களையும் அவற்றைப் போல பூமிகளையும் படைத்திருப்பதை வைத்தே அல்லாஹ்வின் வல்லமை எந்த அளவுக்கு எல்லையற்றது என்பதை அறிவீர்கள். இப்படியாக அகிலங்களில் உள்ள எல்லா படைப்புகளைப் பற்றியும் சூழ்ந்தறியக் கூடிய வல்லமையுடைய அல்லாஹ்விடமிருந்து அருளப்படும் வழிகாட்டுதல்கள் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். அவனே ஒவ்வொரு படைப்புக்கும் உரிய சட்ட விதிமுறைகளை ஏற்படுத்தினான். எனவே அதன்படி வாழ்வதைக் கொண்டே உங்களுக்கு சிறப்பு கிடைக்கும்

சிந்தனையாளர்களே! தலாஃக் விவகாரத்தில் எல்லா சட்ட வரைகளையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்டு விட்டன. இருந்தும் முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள தலாஃக் சட்டங்களே வேறு விதமாக உள்ளன. எனவே தான் முஸ்லிம்கள் சீரழிந்து போகிறார்கள். இதைப் பற்றி ஆராய்ந்து திருக்குர்ஆன் காட்டும் விழியில் செயல்படுவோமாக!

அத்தியாயம்: 66 – சூரத்துத்: தஹ்ரீம் (தடை விதித்தல்)